சென்னை, தரமணி பகுதியில் இருசக்கர வாகனத்தில் குட்கா பாக்கெட்டுகள் கடத்தி வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 25.7 கிலோ குட்கா பாக்கெட்டுகள் மற்றும் 1 இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்களின் ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP -Drive Against Banned Tobacco Products) மூலம் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் சென்னை பெருநகரில் தீவிரமாக கண்காணித்து, குட்கா, மாவா, ஹான்ஸ் ஆகிய தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருபவர்கள், தயார் செய்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, J-13 தரமணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் நேற்று (09.01.2023) தரமணி, 100 அடி சாலையிலுள்ள ஒரு பள்ளி அருகில் கண்காணிப்பு பணியில் இருந்த போது, அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி விசாரணை செய்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின்பேரில், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அதன்பேரில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகளை கடத்தி வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த சங்கர்லால், 22, ராம்நிவாஷ், 24, ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மற்றும் ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த என மொத்தம் 25.7 கிலோ எடை கொண்ட ஹான்ஸ், கூலிப், விமல் உள்ளிட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரும் விசாரணைக்குப் பின்னர், நேற்று (09.01.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.