தமிழக காவல்துறையில் முதன்முறையாக மின்னணு ரோந்துப் பணியை டிஜிபி சைலேந்திரபாபு துவங்கி வைத்தார்.
சர்வதேச தரத்திலான தொழில் நுட்பத்தை புகுத்தி காவல் துறையை நவீனமயமாக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக காவல் துறையினரின் செயல்திறனை மேம்படுத்தவும், குற்ற ஆவணங்களை துல்லியமாக பதிவு செய்யவும், பராமரிக்கவும், தரவுகளை முறையாகவும், சிறப்பாக கையாளவும், ‘ஸ்மார்ட் காவலர்’ என்ற புதிய செயலியை இன்று டிஜிபி அலுவலகத்தில் துவங்கப் பட்டது.அதனை டிஜிபி சைலேந்திரபாபு இன்று துவங்கி வைத்தார். ‘ஸ்மார்ட் காவலர்’ (E-Beat) செயலி காவல் துறையில் களப்பணியாற்றும் அலுவலர்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காகவும், களப்பணியின் பொழுது நிகழும் சம்பவங்களை உடனுக்குடன் பதிவு செய்வதற்காகவும், ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலோ அல்லது உடனடி உதவிகள் தேவைப்பட்டாலோ அது குறித்த செய்தியினை உடனடியாக உயர் அலுவலர்களுக்கு தெரிவிக்க ஏதுவாக இருக்கும். இந்த புதிய செயலி காவல்துறை நிர்வாகத்திலும், பொதுமக்கள் சேவையிலும் ஒரு மைல் கல்லாக அமையும் என டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சென்னை நகர போலீஸ் கமிஷனர் டிஜிபி சங்கர்ஜிவால், தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன், ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உள்ளிட்ட உயர்போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.