வங்கக் கடலில் உருவாக்கி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாண்டஸ் புயலாக வலுப்பெரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில பேரிடர் மீட்பு படையினரின் ஆறு குழுக்கள் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, கடலூர் நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங் களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சென்னையில் மீட்பு பணியில் ஈடுபட தமிழக காவல் துறையைச் சேர்ந்த தேசிய நீச்சல் வீரர்கள் மற்றும் தமிழக கடலோர பாதுகாப்பு குழு மத்தை சேர்ந்த நீச்சல் வீரர்களை கொண்ட 50 பேர் அணி மீட்பு பணி தளவாடங்களுடன் காவல்துறை தலைமையகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடலோர மாவட்டங்களில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த தன்னார்வலர்களும் படகுகளுடன் மீட்பு பணிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், புயல் மழையால் பாதிக்கப் படும் பொதுமக்களுக்கு உதவுவதற்கும், மீட்பு பணியில் ஈடுபடுவதற்கும் காவல் துறையினர் தயார் நிலையில் இருக்கும்படி அனைத்து மாநகர காவல் ஆணையர்களுக்கும், மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.