சென்னை, துரைப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் பாலியல் தொழில் நடத்திய 4 நபர்களை போலீசார் கைது செய்து, 9 வெளிமாநில பெண்களை மீட்டனர்.
சென்னையில் வேலை தேடி கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களிடம் தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத் தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, அவர்களை அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தி சிலர் பணம் சம்பாதிக்கும் குற்ற வாளி களை கைது செய்து நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தர விட்டதன் பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் ரகசியமாக கண்காணித்து மேற்படி குற்றச் செயல்களில் ஈடுபடும் விபச்சார தரகர்களை கைது செய்து, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, விபச்சார தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் கடந்த 21.01.2023 அன்று துரைப்பாக்கம், சக்தி நகர் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியை கண்காணித்த போது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது. அதன் பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் மேற்படி தனியார் தங்கும் விடுதியில் சோதனைகள் மேற்கொண்டு, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய திருவேற்காட்டைச் சேர்ந்த கணேஷ் (22), தஞ்சாவூர் ராஜபிரதாப், 24, திரிபுரா அமிர் பாபு (எ) ஹலாம், 28, மொனிர் உசேன், 29, ஆகிய 4 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் மேற்படி இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்திருந்த 8 வெளிமாநில பெண்கள் உட்பட 9 பெண்கள் மீட்கப்பட்டனர். மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக உள்ள மற்ற 2 குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மேற்படி 4 பேரும் விசாரணைக்குப் பின்னர் நேற்று (22.01.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட 9 பெண்கள் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.