Take a fresh look at your lifestyle.

சேலம் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜ் உள்பட 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

78

சேலம், ஓமலூரை சேர்ந்தவர் கோகுல்ராஜ். இவர் நாமக்கல்லைச் சேர்ந்த இளம் பெண்ணுடன் பழகி வந்தார். கடந்த 2015ஆ-ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி கல்லூரிக்குச் செல்வதாக கூறி விட்டு வீட்டை விட்டு சென்றார். இரவு வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் அவரை தேட தொடங்கினர்.
நாமக்கல் அருகே உள்ள கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில் தண்டவாளத்தில் கோகுல்ராஜின் உடல் தலை வேறு உடல் வேறாக சடலமாக கோகுல்ராஜின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது நாக்கு துண்டிக்கப்பட்டிருந்தது. இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்தக் கொலையில் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவன தலைவர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 பேருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 11.10.2015 அன்று நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் யுவராஜ் சரண் அடைந்தார். இந்த வழக்கில் மேலும் 16 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். சாதி ஆணவப் படுகொலையான இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இந்த நிலையில் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியா, திடீரென தற்கொலை செய்து கொண்டார். அதன்பின் கோகுல்ராஜ் கொலை வழக்கு நாமக்கல் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு, விசாரிக்கப்பட்டு, நாமக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2018 ஆகஸ்டு 30-ம் தேதி விசாரணையும் நடைபெற்றது.

இந்த வழக்கில் மொத்தம் 116 சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தனர். நாமக்கல் நீதிமன்றத்தில் 72 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கு விசாரணை கடந்த 2019 மே 5ம் தேதி முதல் மதுரை எஸ்.சி.எஸ்.டி. சிறப்பு தனி நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கின் விசாரணை முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் நிறைவடைந்தது. இதையடுத்து, கோகுல் ராஜ் கொலை வழக்கில் மார்ச் 5-ந் தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி சம்பத்குமார் தெரிவித்தார். 7 ஆண்டு காலங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் யுவராஜ், அருண், குமார், சங்கர், அருள்வசந்தம் செல்வகுமார், தங்கதுரை (யுவராஜின் சகோதரர்), சதீஸ்குமார், ரகு என்கிற ஸ்ரீதர், ரஞ்சித் ஆகிய 10 பேர் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். இவர்களுக்கான தண்டனை விவரம் வருகிற 8 -ந் தேதி வெளியிடப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் செல்வராஜ், சந்திரசேகர், பிரபு, ஸ்ரீதர், சுரேஷ் ஆகிய 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.