சேத்துப்பட்டில் போலீஸ் போல நடித்து ரூ. 29 லட்சம் கொள்ளை
போலீஸ் போல நடித்து ரூ. 29 லட்சம் பணம் மற்றும் விலையுயர்ந்த செல்போன்களை பறித்துச் சென்ற 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை எழும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் நசீர்கான். அண்ணாசாலையில் சிட்டி அண்ட் கம்பெனி என்ற பெயரில் ஆட்டோ மொபைல் உதிரிபாகங்கள் கடையை நடத்தி வருகின்றார். இந்த கடையில் அண்ணாசாலையை சேர்ந்த சந்தோஷ் குமார் மற்றும் கமலகண்ணன் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று கடை உரிமையாளரின் நண்பரான சென்னை, சேத்துப்பட்டைச் சேர்ந்த முகமது ஷேக் என்பவரிடம் 29 லட்ச ரூபாய் கொடுத்து வரும்படி சந்தோஷ் மற்றும் கமலகண்ணனிடம் உரிமையாளர் நசீர் பணத்தை கொடுத்துள்ளார்.
இருவரும் கைப்பையில் பணத்தை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். சேத்துப்பட்டு குருசாமி பாலம் அடியில் நின்று கொண்டிருந்த நான்கு பேர் திடீரென சந்தோஷ், கமலக்கண்ணனின் பைக்கை வழிமறித்தனர். தங்களை போலீஸ் என்று கூறிய அவர்கள் நீங்கள் இருவரும் கஞ்சா கடத்துவதாக தகவல் வந்துள்ளது. அதனால் பையை சோதனை செய்ய வேண்டும் என மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன சந்தோசும், கமலக்கண்ணனும் பையை அவர்களிடம் கொடுத்துள்ளனர். அதனையடுத்து போலீஸ் என கூறிய அந்த 4 நபர்களும் பணப்பை மற்றும் இரண்டு செல்போன்களையும் பறித்துக் கொண்டு இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் இருவரும் காவல் நிலையம் வாருங்கள் என அழைத்துள்ளனர்.
ஆனால் சந்தோஷ் மற்றும் கமலகண்ணன் ஆகியோர் செல்ல மறுத்ததால் அவர்களின் இருசக்கர வாகனத்தின் சாவியை எடுத்துக்கொண்டு அந்த நபர்கள் தப்பி சென்றுள்ளனர்.
சிறிது நேரத்தில் தாங்கள் மோசடி செய்யப்பட்டதை அறிந்த இருவரும் அது தொடர்பாக தங்கள் முதலாளி நசீர்கானுக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீஸ் போல் நடித்து பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.