துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு தங்கம் கடத்திவரப்படுவதாக கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது துபாயில் இருந்து வந்த சென்னையைச் சேர்ந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட 38 லேப் டாப்கள் இருந்தன. மேலும் ஒருவரிடம் இருந்த செல்போன் பேட்டரியை சந்தேகத்தின் பேரில் பிரித்து பார்த்த போது அதில் தங்க தகடுகள் இருந்தன. பின்னர் 3 பேரையும் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர்கள் உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த ரூ. 59 லட்சத்து 44 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ 200 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் சென்னை பன்னாட்டு விமான நிலைய ஆண்கள் கழிவறையில் உள்ள குப்பை தொட்டியில் சிறிய அளவிலான எலக்ட்ரிக் மோட்டாரில் இருந்த ரூ. 16 லட்சத்து 91 ஆயிரம் மதிப்புள்ள 380 கிராம் தங்க துண்டுகளை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
அதே போல விமான நிலைய பயணிகள் வருகை பகுதியில் கிடந்த அட்டைபெட்டியில் இருந்து ரூ. 17 லட்சம் மதிப்புள்ள 356 கிராம் தங்கத்தையும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மூலம் கடந்த 2 நாட்களில் நடைபெற்ற சோதனையில் மொத்தம் ரூ. 93 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ 936 கிராம் தங்கம் மற்றும் 38 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தங்கம் கடத்தல் தொடர்பாக 3 பேரை கஸ்டம்ஸ் அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.