Take a fresh look at your lifestyle.

சென்னை தாமஸ்மலை பகுதியில் 452 கிலோ குட்கா சிக்கியது: ஆந்திர நபர் கைது

452 kg gudka seazed in st thomas mount

66

சென்னை, ஜுன். 14, 2022

சென்னை புனித தோமையர்மலை பகுதியில் சரக்கு வாகனத்தில் குட்கா பாக்கெட்டுகள் கடத்தி வந்த ஆந்திர மாநில நபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 452.7 கிலோ குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP -Drive Against Banned Tobacco Products) மூலம் சிறப்பு சோதனைகள் நடத்தி குட்காவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக புனித தோமையர்மலை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் காவல் குழுவினர் நேற்று (13.06.2022) காலை, ஆலந்தூர், பால்வெல்ஸ் சாலையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட லகுரக சரக்கு வாகனத்தை நிறுத்தி விசாரணை செய்தனர். வாகனத்தை ஓட்டி வந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். சந்தேகத்தின்பேரில் வாகனத்தை சோதனை செய்தபோது, பூண்டு மூட்டைகளின் நடுவே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் அடங்கிய மூட்டைகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

அதன்பேரில், சட்டவிரோதமாக குட்கா பாக்கெட்டுகள் கடத்தி வந்த ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த சிவகுமார் (வயது 44) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து வாகனத்தில் கடத்தி வந்த 452.7 கிலோ எடை கொண்ட ஹான்ஸ், கூலிப், வி1, எம்.டி.எம், ஸ்வாகத் உள்ளிட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் Suzuki Super Carry இலகுரக சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் சிவகுமார், சென்னையில் உள்ள கடைகளுக்கு சட்டவிரோதமாக விநியோகம் செய்வதற்காக ஆந்திராவில் இருந்து மேற்படி குட்கா புகையிலை பாக்கெட்டுகளை கடத்தி வந்தது தெரியவந்தது. சிவகுமார் விசாரணைக்குப் பின்னர் நேற்று (13.06.2022) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.