சென்னை, ஜெ.ஜெ. நகர் பகுதியில் நடந்து சென்ற பெண்மணியின் கழுத்திலிருந்த தங்க நகைகள் கோர்த்திருந்த தாலிக்கயிறை அறுத்துக் கொண்டு தப்பிய வடமாநிலத்தைச் சேர்ந்த 2 நபர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, முகப்பேர், கோல்டன் ஜார்ஜ் நகர், ஏவாள் தெருவைச் சேர்ந்த ஜோதி (வயது 45). கடந்த 10.4.2022 அன்று மதியம், விட்டினருகே காமராஜர் தெரு மற்றும் அலெக்ஸ் லியோ சந்திப்பு அருகே நடந்து சென்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் ஜோதி கழுத்திலிருந்த தாலிக்கயிற்றை அறுக்க முயன்றனர். ஆனால் ஜோதி தாலிக்கயிற்றை கெட்டியாக இழுத்து பிடித்துக் கொள்ளவே, அந்த நபர் தாலிக்கயிற்றை வேகமாக இழுத்து, தாலிக்கயிற்றில் கோர்த்திருந்த 2 சவரன் எடை கொண்ட நாணல்குழாய் உள்ளிட்ட தங்க அணிகலன்களை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து ஜோதி ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சென்னை மேற்கு மண்டல இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி, அண்ணாநகர் துணைக்கமிஷனர் சிவப்பிரசாத் மேற்பார்வையில் ஜெ.ஜெ.நகர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தினருகில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தனர். அதன்பேரில் அடையாளங்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் அடையாளத்தை கொண்டு தீவிர விசாரணை செய்ததையடுத்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட உபியைச் சேர்ந்த தில்ஷாத், முகமது தனிஷ் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து புகார்தாரரின் 2 சவரன் எடை கொண்ட தாலியில் கோர்க்கப்படும தங்க அணிகலன்கள் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.