Take a fresh look at your lifestyle.

சென்னை கோயம்பேட்டில் செல்போன் கொள்ளையர்கள் 3 பேர் கைது

82

சென்னை, கோயம்பேடு பகுதியில் இருவேறு செல்போன் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 நபர்களை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, விலாநல்லூர் கிராமம், பள்ளிக்கூடதெருவைச் சேர்ந்தவர் விஜயபிரபாகர் (வயது 30). தனது சொந்த வேலை நிமித்தமாக சென்னை வந்த அவர் கடந்த 4.01.2022 அன்று அதிகாலை ஊருக்கு செல்வதற்காக கோயம்பேடு, 100 அடி ரோட்டில் உள்ள ஏ.டி.எம்மில் அருகே பணம் எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த நபர் விஜயபிரபாகரிடமிருந்து 1 செல்போன் மற்றும் ரூ. 300 பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து விஜயபிரபாகர் CMBT காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி உத்தரவின் பேரில் அண்ணாநகர் துணைக்கமிஷனர் சிவபிரசாத் மேற்பார்வையில் சிஎம்பிடி குற்றப்பிரிவு போலீசார் அது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

அண்ணாநகர் காவல் மாவட்ட சைபர் கிரைம் காவல் குழுவினர் உதவியுடன் தீவிர விசாரணை செய்ததில் கொள்ளையில் ஈடுபட்ட நபர் சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜெகன் (30) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கைது செய்யப்பட்ட ஜெகன் மீது கொலை முயற்சி உட்பட 2 வழக்குகள் உள்ளது தெரியவந்தது.

மேலும் கடந்த 1.3.2022 அன்று விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக்குமார் (25) என்பவர் கோயம்பேடு 100 அடி ரோட்டில் நடந்து சென்ற போது அவரிடம் செல்போன் பறிக்கப்பட்டது. அது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அரும்பாக்கம், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த லுக்கேஷ் (30), பாடிகுப்பத்தைச் சேர்ந்த சர்புதீன் (19), ஆகிய இருவரை K-11 CMBT காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட லுக்கேஷ் மீது 3 வழக்குகளும், சர்புதீன் மீது 2 வழக்குகளும் உள்ளது தெரியவந்தது. மேற்கண்ட இரண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்ட 3 குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.