Take a fresh look at your lifestyle.

சென்னை அண்ணாநகரில் செயின் பறிப்பு கொள்ளையன் கைது: 13 பவுன் தங்க நகைகள் பறிமுதல்

88

சென்னை, அண்ணாநகர் பகுதியில் வயதான பெண்மணியின் கழுத்திலிருந்த 5 சவரன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ற கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 13 சவரன் தங்க நகைகள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை, அண்ணாநகர், ஒய் பிளாக், 5வது தெருவைச் சேர்ந்தவர் பிரபாவதி (வயது 62). கடந்த 31.03.2022 அன்று மதியம் சுமார் 3 மணியளவில் வீட்டினருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் பிரபாவதியின் கழுத்திலிருந்த 5 சவரன் தங்க தாலிச்சரடை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இது குறித்து பிரபாவதி அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சென்னை நகர மேற்கு மண்டல இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி, அண்ணாநகர் துணைக்கமிஷனர் சிவபிரசாத் மேற்பார்வையில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அண்ணாநகர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவம் நடைபெற்ற இடத்தினருகில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தனர்.

அதனையடுத்து சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்ட மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த டேவிட் (எ) டேவிட்குமார் (24) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து பிரபாவதியின் 5 சவரன் தங்கச்சங்கிலி உட்பட 13 சவரன் தங்க நகைகள் மற்றும் குற்றச்செயலுக்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் டேவிட்குமார் அவரது நண்பர் முகேஷ் என்பவருடன் சேர்ந்து அண்ணாநகர் மற்றும் திருமங்கலம் பகுதியில் சங்கிலி பறிப்புகளில் ஈடுபட்டுள்ளதும், டேவிட்குமார் மீது ஏற்கனவே, மீஞ்சூர் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கு மற்றும் எண்ணூர் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கு உள்ளதும் தெரியவந்தது. தலைமறைவாக உள்ள மற்றொரு எதிரி முகேஷ் என்பவரை பிடிக்க காவல் குழுவினர் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட எதிரி டேவிட்குமார் விசாரணைக்குப் பின்னர், நேற்று (06.04.2022) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.