சிலைகளை மீட்ட 27 காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு நேரில் பாராட்டு
DGP sylendrababu rewarded idol wing team
தமிழக கோவில்களில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சாமி சிலைகளை மீட்ட தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் 27 பேருக்கு டிஜிபி சைலேந்திரபாபு நேரில் அழைத்து நற்சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
தமிழக கோவில்களில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்பதில் தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் தற்போது துரிதமாக செயல்பட்டு வருகின்றனர். கடந்த 2012ம் ஆண்டு முதல் முதல் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரால் வெளிநாடுகளிலிருந்து மொத்தம் 22 சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் 10 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு அதிகபட்சமாக நான்கு சிலைகள் 2016 ஆம் ஆண்டு மீட்கப்பட்டது.
இந்த ஆண்டு மீட்கப்பட்ட 10 சிலைகள் 6 அமெரிக்காவிலிருந்தும் 4 ஆஸ்திரேலியா விலிருந்தும் கொண்டுவரப்பட்டன. இந்த 10 சிலைகளில் 8 உலோக சிலைகள், 2 கல் சிலைகள். சிலை திருட்டு தடுப்பு பிரிவினர் இச்சிலைகளை தீவிரமான புலன் விசாரணை மூலமாகவும் சட்ட பூர்வமான செல்லத்தக்க புகைப்படங்கள் மற்றும் ஆதாரங்களை அளித்ததன் மூலமாகவும் கடுமையான முயற்சிக்கு பிறகு பல மாதங்களுக்கு இச்சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட இந்த சிலைகள் சமீபத்தில் அவற்றிற்கு சொந்தமான கோவில்களில் ஒப்படைக்கப்பட்டது.
மீட்கப்பட்ட அந்த 10 சிலைகளின் விவரம் பின்வருமாறு:-
1. இரண்டு துவாரபாலகர் சிலைகள் – திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர். ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்டது.
2. நந்திகேஸ்வரர் மற்றும் கங்காள மூர்த்தி உலோக சிலைகள் – தென்காசி மாவட்டம்,
கடையம் காவல் நிலையம். அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்டது.
3. நான்கு கைகள் உடைய விஷ்ணு மற்றும் ஸ்ரீதேவி சிலை – அரியலூர் மாவட்டம், உடையார் பாளையம் காவல் நிலையம்.- அமெரிக்காவிலிருந்து மீட்கப்பட்டது.
4. ஒரே பீடத்தில் அமைந்த சிவன் மற்றும் பார்வதி சிலை – அமெரிக்காவிலிருந்து மீட்கப்பட்டது.
5. நின்ற நிலையிலுள்ள சம்பந்தர் சிலை – ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்டது.
6. குழந்தை சம்பந்தர் சிலை – ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்டது.
7. நடராஜர் சிலை – அமெரிக்காவிலிருந்து மீட்கப்பட்டது.
மேற்கண்ட சிலைகளை மீட்ட எஸ்பிக்கள் ராஜாராம், ரவி, ஏடிஎஸ்பி அசோக் உள்ளிட்ட 27 போலீஸ் அதிகாரிகளை டிஜிபி சைலேந்திரபாபு நேற்று நேரில் அழைத்து அவர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் வெகுமதிகள் வழங்கி பாராட்டினார்.