Take a fresh look at your lifestyle.

சிறப்பாக பணிபுரிந்த 548 காவல் ஆளிநர்களுக்கு முதல்வர் பதக்கம்

67

சென்னை நகரில் சிறப்பாக பணிபுரிந்த 548 ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்களுக்கு தமிழக முதல்வர் பதக்கங்களை கமிஷனர் சங்கர்ஜிவால் வழங்கினார்.

தமிழக காவல் துறையில் பணிக்கு சேர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணிபுரியும் காவலர்களுக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்கள் (Tamilnadu Chief Minister’s Constabulary Medals) அந்தந்த நகரங்கள் மற்றும் காவல் மாவட்டங்களில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் 2022ம் ஆண்டுக்கான தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கங்கள் பெறுவதற்கு, சென்னை பெருநகர காவல் துறையில் 10 ஆண்டுகள் எவ்வித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணிபுரிந்த சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு காவல் நிலையங்களில் பணிபுரியும் 210 காவல் ஆளிநர்கள், போக்குவரத்து காவலில் பணிபுரியும் 148 காவல் ஆளிநர்கள், ஆயுதப்படையில் பணிபுரியும் 73 காவல் ஆளிநர்கள். நுண்ண றிவுப்பிரிவு, மத்திய குற்றப்பிரிவு, நவீன காவல் கட்டுப்பாட்டறை, சென்னை பாதுகாப்பு காவல் பிரிவு, உயர் நீதிமன்ற பாதுகாப்பு காவல் பிரிவு, குற்ற ஆவண காப்பகம், பணியிடை பயிற்சி மையம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் 99 காவல் ஆளிநர்கள் மற்றும் இதர பிரிவுகளான இரயில்வே , பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் Operation ஆகிய காவல் பிரிவுகளில் பணிபுரியும் 18 காவல் ஆளிநர்கள் என மொத்தம் 548 ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இன்று (16.09.2022) மாலை, எழும்பூர், இராஜரத்தினம் மைதானத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் கலந்து கொண்டு ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கங்களை வழங்கி, வாழ்த்துக்களை தெரிவித்து, இந்நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். தொடர்ந்து, சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் அன்பு, பிரேம் ஆனந்த் சின்ஹா, லோகநாதன், கபில்குமார் சி சரத்கர், மகேஷ்வரி ஆகியோர் காவல் ஆளிநர்களுக்கு பதக்கங்ளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மற்றும் காவல் ஆளிநர்களின் குடும்பத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.