Take a fresh look at your lifestyle.

கைதி ராஜசேகர் இறப்புக்கு போலீஸ் காரணமல்ல: கூடுதல் கமிஷனர் அன்பு விளக்கம்

104

சென்னை, ஜுன். 16–

கொடுங்கையூரில் கைதி ராஜசேகரின் மரணத்துக்கும் காவல்துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதற்கு சாட்சியே பிரேத பரிசோதனை முதற்கட்ட அறிக்கை என்று சென்னை காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு நேற்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

சென்னை கொடுங்கையூர் காவல் நிலைய விசாரணை கைதி ராஜசேகர் சந்தேக மரண வழக்கில் நேற்று பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியது. அது தொடர்பாக சென்னை காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.எதிர்பாராமல் இறந்து போனார்

அப்போது அவர் கூறியதாவது, ‘விசாரணை கைதி ராஜசேகர் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வந்தது. குடும்பத்தினரும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர். அது தொடர்பாக ராஜசேகரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது. அந்த அறிக்கையில் 4 காயங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கொடுங்கையூர் காவல்துறையினர் காலை 8 மணிக்கு விசாரணைக்காக அழைத்து வந்தனர். மதியம் 12.30 மணியளவில் உடல் நிலை பாதிக்கப்பட்டது. மாலை 4 மணிக்கு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கிருந்து ஸ்டேன்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மொத்தமாக இந்த நிகழ்வு 10 மணி நேரங்களில் நடந்து முடிந்து விட்டது. ராஜசேகர் மீது 27 வழக்குகள் உள்ளது. சரித்திர பதிவேடு குற்றவாளி. சந்தேகத்தின் பேரில்தான் விசாரணை நடந்தது. எதிர்பாராத விதமாக இறந்து விட்டார்.காயங்களால் அவருக்கு மரணம் ஏற்படவில்லை

மாஜிஸ்திரேட் விசாரணை நடந்து வருகிறது. உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின் படி டாக்டர்கள் குழு மூலம் பிரேத பரிசோதனை நடந்துள்ளது. வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜசேகரின் உடலில் 4 காயங்கள் இருந்தது. முதல் காயம் 3-ல் இருந்து 5 நாட்கள் முன்பு ஏற்பட்ட காயம், 2-வது காயம் 18-ல் இருந்து 20 மணி நேரத்திற்கு முன்பு ஏற்பட்ட காயம், 3 வது காயம் 24 மணி நேரத்தில் ஏற்பட்டது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த காயங்களால் அவர் மரணமடையவில்லை என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காவல்துறை விசாரணையில் இருக்கும் போது ஒரு காயமும் ஏற்படவில்லை. அவர் மீது எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை. அதற்கு சாட்சியாகத்தான் பிரேத பரிசோதனை அறிக்கை உள்ளது.விஸ்ரா அறிக்கை வந்த பிறகு முழு காரணமும் தெரியும்

எதனால் இறந்து போனார் என்பது விஸ்ரா அறிக்கை உள்பட பிற அறிக்கைகள் வந்த பிறகே தெரிய வரும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு உடல் நிலை சரியில்லை என்றால் அருகில் மருத்துவமனைக்கு தான் அழைத்து செல்ல முடியும். தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்வது என்பது தவறான நடைமுறை இல்லை. ராஜசேகரை முதலில் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டது. அவர் நார்மலாக இருக்கிறார் என்று டாக்டர் கூறிய பிறகே போலீஸ் பூத்திற்கு ஓய்வு எடுக்க அழைத்து சென்றனர். மறுபடியும் உடல் நிலை சரியில்லை என்பது தெரிந்த பிறகே மீண்டும் அங்குள்ள பவித்ரா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். விசாரணைக்காக அழைத்து வரும் உடல் நிலை குறித்து பார்ப்பதில்லை. நீதிமன்ற காவலுக்கு செல்லும் போது தான் உடல் நிலை பரிசோதனை செய்யப்படும். போலீஸ் பூத்தில் வைத்து விசாரித்ததில் தவறில்லை. அதுவும் போலீஸ் கட்டிடம் தான். ஓய்வுக்காகத்தான் போலீஸ் பூத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.பேரம் பேசுகிறார்கள் என்ற தகவல் பொய்யானது

குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அன்றைய தினம் காவல் நிலைய பணியில் இல்லை. முதல்வர் வீட்டு பாதுகாப்பு பணிக்கு சென்று விட்டார். அதனால் சட்டம் ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளர் விசாரணை நடத்தி உள்ளார். விசாரணையில் இறந்ததால் தான் முதற்கட்டமாக காவல் ஆய்வாளர் உள்பட 5 பேரை சஸ்பெண்டு செய்துள்ளோம். அவர்கள் அஜாக்கிரதையாக இருந்து இருக்கலாம். காவல்துறை தாக்கவே இல்லை என்பதே சொல்கிறது பிரேத பரிசோதனை அறிக்கை. துறைரீதியிலான விசாரணை தற்போது நடந்து வருகிறது. காவல்துறையினர் பேரம் பேசுகிறார்கள் என்ற தகவல் பொய்யானது. இது போன்ற சம்பவத்தில் யாரும் ஈடுபடவில்லை. எப்போதும் பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கை தான் முதலில் வெளிவரும். எல்லா விதமாக அறிக்கைகள் வந்த பிறகே இறுதி அறிக்கை கொடுக்கப்படும். எப்படி இறந்து போனார் என்பது இறுதி அறிக்கை வந்த பிறகே தெரிய வரும். கொள்ளை வழக்கில் ஆட்டோ ஓட்டுனர் சங்கர் இதுவரை கைது செய்யப்படவில்லை.இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க அறிவுரை வழங்கியுள்ளோம்

இது போன்ற சம்பவங்கள் வருங்காலங்களில் நிகழாமல் தடுக்கும் விதமாக அனைத்து காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. தனிப்படை போலீசாரையும் அழைத்து பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளோம். விசாரணைக்காக அழைத்து வருபவர்கள் குறித்து முன்கூட்டியே ஆய்வு செய்ய வேண்டும். உடல் நிலை சரியில்லாத ஆட்கள், வயதானவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துவர வேண்டியதில்லை. தெளிவாக மீண்டும் மீண்டும் வலியுறுத்தி உள்ளோம். அதனை எப்படி கடைபிடிக்கிறார்கள் என்பது தொடர்பாக கீழ் உள்ள அதிகாரிகள் ஆய்வு செய்ய சொல்லி உள்ளோம். உதவி ஆணையர்களை ஆய்வு செய்ய சொல்லி உள்ளோம். இரவு நேரங்களில் விசாரணைக்காக யாரையும் வைக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளோம்.

ராஜசேகர் மரணத்திற்கும் காவல்துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று கூடுதல் ஆணையர் அன்பு கூறியுள்ளார்.