தூத்துக்குடி மாவட்டத்தில் குட்கா, கஞ்சா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்வதை முற்றிலும் தடுக்கும் பொருட்டு தூத்துக்குடி ராஜ் மஹாலில் இன்று அனைத்து வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் எஸ்பி பாலாஜி சரவணன் பேசுகையில், ‘‘தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்களை தடுப்பதற்காக தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் படி சமீபத்தில் 26 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பள்ளிகளின் அருகில் சட்டவிரோதமாக குட்கா, கஞ்சா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்வதை முழுமையாக கட்டுபடுத்தப்பட்டு வருகிறது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் கடைகளில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை 100 சதவீதம் தடை செய்ய வேண்டும், மீறினால் சட்டப்படி அந்த கடைக்கு சீல் வைக்கப்படுவதுடன் குற்றவியல் வழக்கும் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.’’
இந்ந கூட்டத்தில் தூத்துக்குடி வியாபாரிகள் சங்க தலைவர் சோலையப்பராஜா, செயலாளர் மகேஸ்வரன், தூத்துக்குடி மத்திய வியாபாரிகள் சங்க செயலாளர் பாஸ்கர், பொருளாளர் ஆறுமுகம், அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் உட்பட பொதுமக்கள் மற்றும் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபிரகாஷ், போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், உதவி ஆய்வாளர் முருகபெருமாள் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.