குடிபோதையில் வாகனம் ஓட்டி போலீசாரிடம் சிக்கும் வாகன ஓட்டிகள் அபராத தொகையை 14 நாட்களில் செலுத்த தவறினால் வாகனம் ஏலம் விடப்படும் என்று போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் தொடர்பான அரசாணை யை தமிழ்நாடு அரசு கடந்த அக்டோபர் 20ம் தேதி வெளியிட்டது. அதில், வரும் 28ம் தேதியில் இருந்துதான் புதிய அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். அதுபோலவே, குடிபோதையில் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் ரூ.10,000 அபராதம் விதித்து வருகின்றனர். ஆனால் பல வாகன ஓட்டிகள் அபராத தொகையை செலுத்தாமல் வாகனத்தை இயக்கி வருகின்றனர். இதனால் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, போக்குவரத்து போலீசார் அபராத தொகையை செலுத்துமாறு நீதிமன்றம் மூலமாக வாரண்ட் பெற்று குறிப்பிட்ட வாகன ஓட்டிகளுக்கு அனுப்புகின்றனர். நீதிமன்ற வாரண்ட் வழங்கி 14 நாட்களுக்குள் வாகன ஓட்டிகள் அபராத தொகை செலுத்த வில்லையென்றால் வண்டி பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும்.
இவ்வாறு போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.