சென்னையில் கைவிடப்பட்ட ஆதரவற்ற நிலையில் இருந்த சென்னை பெருநகர காவல் துறையின் ‘காவல் கரங்கள்‘ மூலம் மீட்கப்பட்ட 160 வட மாநிலத்தவர்களுக்கு உதவி பொருட்கள் வழங்கப்பட்டு ரயில் மூலம் ராஜஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்னை பெருநகரில் உறவுகள் அற்ற நிலையில் உண்ண உணவும், இருப்பிடமும் இல்லாமல் சாலையில் தவித்து வரும் முதியோர், பெண்கள், சிறுவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு உதவிடவும், அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கி தங்குமிடங்களில் தங்க வைத்து பராமரித்திட மற்றும் அவர்களை குடும்பத் தோடு இணைப்பதே குறிக்கோளாக கொண்டு, சென்னை பெருநகர காவல் கட்டுப்பாட்டறை உதவி மையம் மூலம், அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் ஒத்துழைப்புடன் ஒருங்கிணைந்து செயல்பட “காவல் கரங்கள்” என்ற புதிய திட்டத்தை திட்டத்தை சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் 21.04.2021 அன்று துவக்கி வைத்தார்.
கடந்த 2021 மற்றும் 2022ம் ஆண்டில் காவல் கரங்கள் அமைப்பினர் “கருணைப் பயணம்-1 மற்றும் 2” மூலம் சென்னை பெருநகரில் ஆதரவின்றியும், மனநலம், உடல்நலம் பாதிக்க ப்பட்ட நிலையிலும் சுற்றித்திரிந்த 303 வடமாநிலத்தவர்களை, தன்னார்வலர்களின் உதவியுடன் மீட்டு மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளித்தும், தொண்டு நிறுவனங்களில் தங்க வைத்து பராமரித்தும், அவர்களது விவரங்களுடன், உதவி பொருட்கள் கொடுத்து ரயில் மூலம் இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தொண்டு நிறுவனத்திடம் சேர்த்து, பின்னர் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதே போல ராஜஸ்தான் மாநிலம் தொண்டு நிறுவனத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த தென் மாநிலங்களைச் சேர்ந்த 90 நபர்களை அழைத்து வந்து அவர்களின் உரிய முகவரியை கண்டறிந்து, 45 நபர்கள் குடும்பத்தாருடன் மீண்டும் சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சென்னை பெருநகரில் “காவல் கரங்கள்” திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் கடந்த 15.08.2022 அன்று நடந்த சுதந்திர தினவிழாவில் தமிழக முதல்வர் அவர்கள் தமிழக அரசின் “நல் ஆளுமை” விருது வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் தொடர்ச்சியாக இன்று (09.01.2023) இரவு தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் ஆகியோர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த “கருணைப் பயணம்-3″ வழியனுப்பும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு,”காவல் கரங்கள்” மற்றும் தொண்டு உதவிப்பொருட்களை வழங்கி, 50 தன்னார்வலர்களுடன் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் இராஜஸ்தானுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து “த்ரைவ் டிஜிட்டல் ஹெல்த் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பாலசுப்ரமணியன், மற்றும் அரவிந்த் சீனிவாசன் (CFO) அவர்கள் மேம்படுத்தப்பட்ட உயிர்காக்கும் அவசர சிகிச்சை அளிக்கும் உபகரணங்கள் அடங்கிய ஆம்புலன்ஸ் வாகனத்தை எழும்பூரில் செயல்பட்டு வரும் காவல் மருத்துவமனை பயன்பாட்டிற்காக வழங்கினர். மேலும் “ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் சென்ட்ரல் தலைவர் திரு.பிரிஜி கண்டேல்வால் மின்சாரத்தால் இயங்கும் ஆட்டோவை உணவு விநியோகம் செய்வதற்காக காவல் கரங்கள் அமைப்பிற்கு வழங்கினார். ரவுண்ட் டேபில் இந்தியா திரு.சந்தோஷ் அவர்கள் கருணைப்பயணம் செல்பவர்களின் பயணத்திற்கு உதவிகள் செய்தார்.
இது வரை சென்னை பெருநகர காவல் துறையின் காவல் கரங்கள் உதவி மையம் மூலம் 3,788 வீடற்ற, ஆதரவற்ற நிலையில் உள்ள மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2,905 பேர் காப்பகங்களில் தங்க வைத்தும், 467 பேர் அவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து வைக்கப்பட்டும், 348 பேர் மன மனநல மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டும், 68 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். மேலும் உரிமை கோரப்படாத 1,744 இறந்த உடல்கள் தன்னார்வலர்களின் உதவியுடன் மீட்கப்பட்டு, உரிய இறுதி மரியாதையுடன் நல்லடக்கம் செய்தும், காவல் கரங்கள் உதவி மையம் உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர கூடுதல் காவல் ஆணையாளர்கள் முனைவர் திரு.ஜெ.லோகநாதன், இ.கா.ப, (தலைமையிடம்), இணை ஆணையாளர் சாமுண்டிஸ்வரி, இ.கா.ப. (தலைமையிடம்), துணை ஆணையாளர் இராமமூர்த்தி, (நிர்வாகம்) காவல் அதிகாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.