Take a fresh look at your lifestyle.

கார் மீது அரசு பஸ் மோதல்: கணவன், மனைவி உள்பட 4 பேர் பலி

68

கார் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் கணவன் மனைவி உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் கடலூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் மதிவாணன் (வயது 35). இவரது மனைவி கவுசல்யா (32). இவர்களது மகள் சாரா. இவர்கள் தற்போது தஞ்சாவூரில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். மதிவாணனின் உறவினர் இல்ல திருமணம் சென்னை வடபழனி பகுதியில் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக மதிவாணன் முடிவு செய்தார். அதன்படி மதிவாணன், அவரது மனைவி கவுசல்யா, மகள் சாரா, மாமனார் துரை (60), மாமியார் தவ மணி (55) ஆகியோர் ஒரு காரில் சென்னை வடபழனிக்கு சென்றனர். அங்கு திருமண விழாவில் பங்கேற்று விட்டு நேற்று இரவு சொந்த ஊருக்கு காரில் புறப்பட்டனர். வரும் வழியில் செங்கல்பட்டு பகுதியில் உள்ள மதிவாணனின் தங்கை தேவி வீட்டுக்கு சென்றனர். அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு அங்கிருந்து காரில் புறப்பட்டனர்.

அவர்கள் வந்த கார் இன்று அதிகாலை கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆவட்டி கிராமம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது காருக்கு பின்னால் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி அரசு பஸ் வந்தது. கண்ணி மைக்கும் நேரத்தில் கார் மீது அரசு பஸ் பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் மதிவாணன், அவரது மனைவி கவுசல்யா, மாமியார் தவமணி, மகள் சாரா ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி பலியானார்கள். பலியானவர்களின் உடல்கள் இடிபாடுகளில் சிக்கி கிடந்தது.

இது பற்றி தகவலறிந்த வேப்பூர் தீயணைப்பு படையினர், ராமநத்தம் போலீசார் அங்கு விரைந்தனர்.விபத்தில் பலியான 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மதிவாணனின் மாமனார் துரையை மீட்டு வேப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.