Take a fresh look at your lifestyle.

காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழாவில் இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம் வழங்குகிறார் பிரதமர் மோடி

66

இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனுக்கு பிரதமர் மோடி நாளை கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்குகிறார்.

திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் நாளை 16-வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இதற்காக பிரதமர் மோடி நாளை காலை பெங்களூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மதியம் 2 மணிக்கு விமானம் மூலம் மதுரை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காந்தி கிராமம் வருகிறார்.
பல்கலைக்கழக பல்நோக்கு அரங்கில் பிற்பகல் 3 மணிக்கு பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. இந்த விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தர் அண்ணாமலை தலைமை வகிக்கிறார். 2018, 19, 2019 20ம் கல்வி ஆண்டில் படித்து முடித்த மாணவர்களுக்கு பிரதமர் மோடி பட்டங்களை வழங்குகிறார். தொடர்ந்து இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை பிரதமர் வழங்குகிறார்.

மாலை 5 மணி அளவில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டர் மூலம் மதுரை செல்லும் பிரதமர் அங்கிருந்து விமானத்தில் டெல்லி திரும்புகிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு காந்தி கிராம பல்கலைக்கழக வளாகத்தில் 3 ராணுவ ஹெலிகாப்டர்கள் நிற்கும் வகையில் ஹெலிபேடு தயாராக உள்ளது. இங்கு 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் பல முறை ஒத்திகை நடத்தப்பட்டது. பிரதமர் மோடி வருகையையொட்டி, திண்டுக்கல், காந்திகிராமம், சின்னாளப்பட்டி, அம்பாத்துரை ஆகிய பகுதிகள் பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்கப் பட்டுள்ளன. பல்கலைக்கழக வளாகம் மத்திய பாதுகாப்பு பிரிவினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சிறுமலை வனப்பகுதி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை, கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

நாளை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் ஹெலிகாப்டர் இயக்குவதில் சிரமம் ஏற்படும் பட்சத்தில் மதுரையில் இருந்து கார் மூலம் பல்கலைக்கழகத்துக்கு வருவதற்கான ஒத்திகை நிகழ்ச்சியும் நடைபெற்றது. என்.எஸ்.ஜி என்று அழைக்கப்படும் தேசிய பாதுகாப்பு படையினர், மத்திய மாநில உளவு பிரிவு போலீசார், உள்ளூர் காவல்துறை அதிகாரிகள், ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு படை போலீசார் என மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விமான நிலைய ஓடுபாதை, கண்காணிப்பு கோபுரம், விமான நிலைய உள் வளாகம் ஆகிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலைய உள் வளாகத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்கு நேற்று முதல் 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையை, இன்று பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், நாளை காலை 11 முதல் மாலை 5 மணி வரையிலும் மதுரை – திண்டுக்கல் வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. பட்டமளிப்பு விழா நடைபெறும் காந்திகிராம பல்கலைக்கழக வளாகம் முழுவதும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர்.