காணாமல் போன சிறுவன் 36 மணி நேரத்தில் டில்லியில் மீட்பு: வேளச்சேரி போலீசுக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் பாராட்டு
வேளச்சேரி பகுதியில் காணாமல் போன 16 வயது சிறுவனை சென்னை வேளச்சேரி போலீசார் 36 மணி நேரத்தில் டில்லியில் மீட்டனர்.
சென்னை, மடிப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ் (வயது 47). இவரது 16 வயது மகன் கடந்த 2.01.2023 அன்று பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து ரமேஷ் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனையடுத்து கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் வேளச்சேரி இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையில் தனிப்படையினர் சிறுவன் படித்த பள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணையை தொடங்கினர்.
அதனையடுத்து சிறுவன் மடிப்பாக்கம், ராம் நகர் பேருந்து நிலையத்திற்கு 2.01.2023 அன்று மாலை 4 மணியளவில் வந்து பேருந்தில் ஏறி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறங்கியது பேருந்து நடத்துனரிடம் விசாரணை செய்ததில் தெரியவந்தது. உடனே தனிப்படை காவல் குழுவினர் விரைந்து செயல்பட்டு எம்ஜிஆர் ரயில் நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கண்காணிப்பு கேமரா க்களை ஆய்வு செய்தனர். இதில், சிறுவன் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குள் நுழைந்து, பிளாட்பாரம் எண் 3க்கு சென்று
டெல்லிக்கு செல்லும் ஜிடி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே தனிப்படை காவல் குழுவினர் டெல்லி ஆர்.பி.எப் போலீசாருக்கு தகவல் தெரிவித்து சிறுவனின் புகைப்படத்தை வாட்ஸ்அப் மூலம் அனுப்பி டெல்லி ஆர்பிஎப் போலீசாரை உஷார்படுத்தினர். மேலும் தனிப்படை காவல் குழுவினர் டெல்லி நிஜாமுதீன் ரயில் நிலையத்திற்கு, ரயில் வரும் முன்பே விரைந்து சென்று காத்திருந்தனர். இன்று (04.01.2023) காலை ரயில் நிலையத்தில் இறங்கிய சிறுவனை மீட்டனர். புகார் அளித்த 36 மணி நேரத்திற்குள், காணாமல் போன சிறுவனை கண்டுபிடித்து மீட்ட காவல் குழுவினரை
கமிஷனர் சங்கர்ஜிவால் வெகுவாக பாராட்டினார்.