சென்னை, நவ. 16–
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் ராக்கிங் தடுப்புக்குழு மற்றும் ராக்கிங் எதிர்ப்புப் படை செயல்பட வேண்டும் என கல்வி நிறுவனங்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் தனியார் மருத்துவக் கல்லூரி விடுதியில் முதலாம் ஆண்டு மாணவர்களை சீனியர் மாணவர்கள் அரை நிர்வாணத்துடன் டவுசருடன் ராக்கிங் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குட்டிக்கரணம், தண்டால் எடுப்பது, மாணவர்கள் கட்டி பிடித்து முத்தம் கொடுக்க செய்து ராக்கிங் கொடுமை செய்த சம்பவங்கள் குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது. மேலும் மருத்துவ கல்லூரி நிர்வாகத்திற்கு புகார் கடிதம் வந்தது. இதனைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தினர் விசாரணை நடத்தி மாணவர்கள் 7 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இந்த கொடுமையான செயலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். தனியார் மருத்துவக் கல்லூரி முதல்வர் சார்பில் பாகாயம்
போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் இந்த கல்லூரிகளில் ராக்கிங் சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் வகையில் சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத் தரவிட்டுள்ளார். அது தொடர்பாக டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம வருமாறு:–
* ராக்கிங் சம்பவம் தொடர்பாக புகார்கள் மீது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தாரால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மீது திருப்தியடையாத பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் அளிக்கும் புகார் மீது உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* கல்வி நிறுவனத்தினர் தரப்பில் ஏதேனும் அலட்சியம் காரணமாக காவல்துறையிடம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் வேண்டுமென்றே தாமதம் செய்தால், அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ராக்கிங்கில் பாதிக்கப்பட்டவர் அல்லது அவரது பெற்றோர் பாதுகாவலர் நேரடியாக காவல்துறையிடம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய விரும்பினால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க
வேண்டும். கல்வி நிறுவனத்தால் மனநல ஆலோசகர்கள் மூலம் மாணவர்களிடையே நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் மற்றும் முதலாமாண்டு மற்றும் சீனியர் மாணவர்களிடையே இணக்கம் ஏற்படும் விழிப்புணர்வு நிகழ்வுகள் கல்விநிறுவனத்தாரால் நடத்தப்பட வேண்டும்.
* ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் ராக்கிங் தடுப்புக் குழு மற்றும் ராகிங் எதிர்ப்புப் படை இருக்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் ராகிங் தொடர்பான கண்காணிப்பு பிரிவு இருக்க வேண்டும். – விடுதி கண்காணிப்பாளர் எல்லா நேரங்களிலும் அணுகக்கூடிய நிலையில் இருக்க வேண்டும் மற்றும் கல்வி நிறுவன பொறுப்பாளர்கள்,
ஆசிரிய உறுப்பினர்கள், ராகிங் எதிர்ப்புக் குழு உறுப்பினர்கள், மாவட்ட மற்றும் உட்கோட்ட அதிகாரிகள் மற்றும் மாநில அதிகாரிகளின் தொலைபேசி எண்களும் வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டும். ராக்கிங்கில் ஈடுபடவோ அல்லது அதற்கு துணைபுரிந்து விடவோ கூடாது என்ற உறுதிமொழியைப் ஒவ்வொரு கல்வி
ஆண்டின் தொடக்கத்திலும் ஒவ்வொரு மாணவருக்கும் கையேடு துண்டறிக்கை மூலமாக விநியோகிக்கப்பட்டு உறுதிமொழி படிவத்தில் கையொப்பம் பெற வேண்டும்.
-* மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, வளாகத்தில் பல இடங்களில் பதாகைகள் விளம்பரங்கள் மூலமாக காட்சிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு விடுதியிலும் அல்லது அதன் அருகாமையில் முழுநேர விடுதிக்கண்காணிப்பாளர் தங்கி இருக்க வேண்டும் என்பதை கல்வி நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும், கல்வி நிறுவனங்களில் ராகிங் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் பின்வரும்
நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(i) மாணவர்களிடையே ராக்கிங் எதிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.
(ii) இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க மாவட்ட ராக்கிங் எதிர்ப்புக் குழுக்களும் செயல்படுத்தப்பட வேண்டும்
iii) சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள், கல்வி நிறுவனங்களின் நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களை ஒருங்கிணைந்து மாணவர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
(iv) விழிப்புணர்வு ஏற்படுத்தும் போது அதிகார எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளின் தொலைபேசி எண்கள், கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தினரும் மற்றும் மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். அறிவிப்புப் பலகைகளில் தொலைபேசி, மொபைல் வாட்ஸ் ஆப்
எண்கள் குறிப்பிடப்பட வேண்டும்.
(v) கல்வி வளாகத்தின் முக்கியமான இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவதை உறுதி செய்தல் வேண்டும்.
(vi) பெறப்பட்ட புகார்களை முன்னுரிமை அடிப்படையில் விசாரிக்கப்பட வேண்டும்.
(vii) பதிவு செய்யப்பட்ட வழக்குகள் விரைவில் முடிக்கப்பட வேண்டும்: சட்டக் கருத்துக்கள் பெறுவதில் தாமதம் கூடாது.
(viii) வழக்குகள் கோப்பில் எடுக்கப்படாத பட்சத்தில், நீதிமன்றத்தை அணுகி உடனடியாக கோப்புக்கு எடுக்கப்பட வேண்டும்.
* கல்வி நிறுவனங்களில் ராக்கிங் கலாசாரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், மாநகர காவல் ஆணையர்களும், ராக்கிங் மற்றும் அது தொடர்பாக புகார்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைய வழி காவல் உதவி/இலவச உதவி எண்ணில் இருந்து பெறப்படும் புகார்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
இவ்வாறு டிஜிபியின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.