சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், கடந்த 7 நாட்கள் சிறப்பு சோதனை மேற்கொண்டு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா புகையிலை பொருட்கள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 15 நபர்கள் கைதாகியுள்ளனர். 34 கிலோ 13 கிராம் குட்கா, 380 கிராம் மாவா மற்றும் ரொக்கம் ரூ. 500- பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP -Drive Against Banned Tobacco Products) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில்,, இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில். காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, குட்கா மற்றும் மாவா புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 19.02.2023 முதல் 25.02.2023 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொரு ட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 15 நபர்கள் கைது. 34 கிலோ 13 கிராம் குட்கா புகையிலைப் பொருட்கள், 380 கிராம் மாவா மற்றும் ரொக்கம் ரூ.500/- பறிமுதல் செய்யப்பட்டது. இதில் குறிப்பிடும்படியாக, K-8 அரும்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் கடந்த 23.02.2023 அன்று அரும்பாக்கம், அசோகா நகர் பகுதியிலுள்ள ஒரு கடையில் ரகசியமாக கண்காணித்தபோது, அங்கு சட்டவிரோதமாக குட்கா புகையிலைப் பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.
அதன் பேரில் சட்டவிரோதமாக குட்கா புகையிலைப் பாக்கெட்டுகள் விற்பனை செய்த மேற்படி கடையின் உரிமையாளர் அரும்பாக்கத்தைச் சேர்ந்த தன்ராஜ், வ/30 என்பவரை கைது செய்தனர். மேற்படி கடையிலிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லிப், விமல், எம்.டி.எம், ரெமோ உட்பட 31.87 கிலோ எடை கொண்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதால், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் உள்பட சட்டவிரோத பொருட்களை கடத்தி வருபவர்கள், பதுக்கி வைப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.