Take a fresh look at your lifestyle.

ஒரே நாடு; ஒரே தேர்தல்: அதிமுக ஆதரவு: சட்ட ஆணையத்துக்கு எடப்பாடி கடிதம்

43

ஒரே நாடு; ஒரே தேர்தல் முறைக்கு அதி.மு.க. ஆதரவு அளிப்பதாக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்திய சட்ட ஆணையத்திற்கு பதில் கடிதம் அனுப்பி உள்ளார்.

நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையிலான ‘ஒரே நாடு ஒரே தேர்தலை’ செயல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்யுமாறு தேசிய சட்ட ஆணையத்தை, மத்திய சட்ட அமைச்சகம் கேட்டுக் கொண்டது.

இந்த விவகாரத்தில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர்களிடம் கருத்து கேட்டு, அவர்களது நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் முக்கிய சட்ட திருத்தத்தை சட்ட ஆணையம் கொண்டு வர உள்ளது. நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது பொதுமக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும்தான் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே சட்ட ஆணையம் பொதுமக்களிடமும், அரசியல் கட்சிகளிடமும் தான் இதுதொடர்பான கருத்துகளை கோர விரும்புகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறு அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் மத்திய சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

அண்ணா தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சினையால் எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளை நியமித்து செயல்பட்டு வருகின்றனர். பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்கள், இடைக்காலப் பொதுச் செயலாளர் நியமனம் உள்ளிட்ட விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தெரிவித்துவிட்டனர். இதை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் மனு அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் எந்த முடிவையும் தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் மத்திய சட்ட ஆணையத்தின் தலைவரும், நீதிபதியுமான ரிது ராஜ் அவஸ்தி, அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிட்டு, ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக கருத்து கேட்கும் பொது நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதுதொடர்பான கருத்துகளை ஜனவரி 16ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று கூறப் பட்டிருந்தது. ஆன்லைன் முறையில் 30 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு அளிப்பதாக அண்ணா தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்திய சட்ட ஆணையத்திற்கு பதில் கடிதம் அனுப்பி உள்ளார்.