ஏன்யா ரேட் அதிகமாக விக்குறீங்க…. டாஸ்மாக் சூப்பர்வைசரை தாக்கிய போதை ஆசாமிகள் இருவர் கைது
tasmac supervisor attaked 2 persons arrested
சென்னை, கே.கே.நகர் பகுதியில் டாஸ்மாக் மேற்பார்வையாளரை கல்லால் தாக்கிவிட்டு தப்பிய 2 நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த வீரராகவன் (49). சென்னை, அசோக்நகர், 100 அடி சாலையிலுள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 19.05.2022 அன்று மதியம், 2 நபர்கள் மேற்படி டாஸ்மாக் கடைக்கு வந்து, மதுபாட்டில் வாங்கியபோது, மதுபாட்டிலில் இருக்கும் விலையை விட அதிக விலைக்கு விற்கிறீர்களே என இருவரும் டாஸ்மாக் கடை விற்பனையாளரிடம் தகராறு செய்துள்ளனர். அப்பொழுது கடையின் வெளியே நின்றிருந்த மேற்பார்வையாளர் வீரராகவன், அரசு நிர்ணயித்த விலையில்தான் விற்கிறோம். சமீபத்தில் விலையேற்றம் செய்த விலை பட்டியல் இங்கு ஒட்டப்பட்டுள்ளது பாருங்கள் என சொன்னபோது, மேற்படி 2 நபர்களும் வீரராகவனிடம் தகராறு செய்து, தகாத வார்த்தைகளால் பேசி, கீழே இருந்த கல்லை எடுத்து வீரராகவன் தலையில் அடித்து இரத்தக்காயம் ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றனர்.
ரத்தக்காயமடைந்த வீரராகவனை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், வீரராகவன் கொடுத்த புகாரின் மீது R-7 கே.கே.நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அது தொடர்பாக கே.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தினருகில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தனர். அதனையடுத்து இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட மதன்குமார் (43), முருகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர், நேற்று (20.05.2022) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.