உலக அளவிலான விளையாட்டுப் போட்டியில் தங்கம்: சென்னை நகர இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு சங்கர் ஜிவால் கமிஷனர் பாராட்டு
commissioner shankar jiwal IPS., appreciated World Police & Fire Game medal winners
உலகளவிலான காவலர் மற்றும் தீயணைப்புதுறைக்கான விளையாட்டுப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சென்னை பெருநகர இன்ஸ்பெக்டர், சிறப்பு எஸ்ஐ, பெண் தலைமைக்காவலர் ஆகியோரை கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் அழைத்து பாராட்டினார்.
உலகளவில் காவலர் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கான விளையாட்டு போட்டிகள் (World Police & Fire Games-2022) (தடகளம் மற்றும் குழுபோட்டிகள்) இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. 2022ம் ஆண்டிற்கான காவலர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கான விளையாட்டு போட்டி நெதர்லாந்து நாட்டிலுள்ள ரோட்டர் டாம் மற்றும் டன் ஷாக் நகரங்களில் கடந்த 22.07.2022 முதல் 31.07.2022 வரை நடைபெற்றது. இதில் சுமார் 70க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 6,000 காவல் மற்றும் தீயணைப்புதுறையினர் பங்கு பெற்றனர்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்து 100 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் இவ்விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டனர். தமிழகத்திலிருந்து 12 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டபந்தயம், தொடர் ஓட்டம் போன்ற தடகள போட்டிகளில் கலந்து கொண்டு 13 தங்கம், 9 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களை பெற்று தமிழக காவல் துறைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இந்த விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட சென்னை பெருநகர காவல்துறை, காவல் ஆய்வாளர் சரவண பிரபு 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றார். குமரன் நகர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாலு 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கல பதக்கமும், அண்ணாநகர் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் தலைமைக்காவலர் பிரமிளா, 100 மீட்டர் , 400 மீட்டர் ஓட்டம் மற்றும் நீள தண்டுதலில் முறையே 3 தங்கப் பதக்கங்கள், 200 மீட்டர் ஓட்டம் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் 2 வெள்ளிப்பதக்கங்கள் உள்பட 5 பதக்கங்கள் என மொத்தம் 7 பதக்கங்களை பெற்று சென்னை பெருநகர காவல் துறைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
உலகளாவிலான காவல் மற்றும் தீயணைப்புதுறைக்கான விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சென்னை பெருநகர காவல் சரவணபிரபு, எஸ்ஐ பாலு, தலைமைக்காவலர் பிரமிளா ஆகியோரை காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால் இன்று நேரில் அழைத்து வாழ்த்தினார். உடன் கூடுதல் காவல் ஆணையாளர்கள் லோகநாதன், கபில் குமார் சி சரத்கர் மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.