உணவு டெலிவரி செய்யும் பெண்ணிடம் செல்போன் பறித்த சிறுவன் உள்பட 2 பேர் கைது: பொதுமக்கள் விரட்டிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
chain snatching accused arrested in pattinappakam
சென்னை, பட்டினப்பாக்கம் பகுதியில் பெண்ணிடம் செல்போன் பறித்த இளஞ்சிறார் உள்பட இருவரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து 1 இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை, மயிலாப்பூர், ராமகிருஷ்ணாபுரம் முதல் தெருவில் வசித்து வருபவர் தேவி (வயது 38). தனியார் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று (21.05.2022) இரவு 10 மணியளவில் பட்டினப்பாக்கம், ஆர்.கே மடம் சாலை சந்திப்பு, ஸ்கீம் ரோட்டில் இருசக்கர வாகனத்தின் முன் பகுதியில் தனது செல்போன் வைத்துக் கொண்டு, வாடிக்கையாளருக்கு உணவு டெலிவரி செய்ய சென்று கொண்டிருந்தார், அப்போது பின்புறமாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் தேவியின் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதனைக் கண்ட பொதுமக்களில் ஒருவர் செல்போன் கொள்ளையனை இருசக்கர வாகனத்தில் துரத்திச்சென்று அடையாறு, கஸ்துரிபாய் நகர் 2வது தெருவில் பொதுமக்கள் உதவியுடன் மடக்கிப்பிடித்து அடையாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அடையாறு போலீசார் சம்பவம் நடந்த இடம் பட்டினம்பாக்கம் என்பதால் 2 பேரையும் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பட்டினப்பாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை நடத்தியதில் பிடிபட்டவர்கள் சென்னை, ராயப்பேட்டையைச் சேர்ந்த சஞ்சய் (19) என்று தெரியவந்தது. மற்றொருவர் 17 வயது இளஞ்சிறார் என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் இருவரிடம் இருந்து புகார்தாரரின் செல்போன் மற்றும் குற்றச் சம்பவத்திற்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சஞ்சய் விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்திலும், 17 வயது இளஞ்சிறார், சிறார் நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்பட்டனர்.