இனி தமிழகத்தில் கஞ்சா விற்பவர்கள் மீது சொத்து முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று டி ஜி பி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கஞ்சா, குட்கா மற்றும் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க
முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவுகள் பிறப்பித்துள்ளார்.
அதன்படி,
28.03.2021 முதல் தமிழ்நாடு முழுவதும் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2௦ டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் கடுமையாக
நடந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் கடந்த 15 நாட்களில், 1,778 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு,
அவர்களிடமிருந்து 2,400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள்
பயன்படுத்திய 135 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதே போல 4,334
குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு 312 டன் குட்கா மற்றும் 72 வாகங்கள்
கைப்பற்றப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியில் மூன்று கஞ்சா வியாபாரிகளின்
10 வங்கிக் கணக்குகளும், ஆறு நிலம், வீட்டுமனை, வாகனம் போன்ற
சொத்துக்களும் முடக்கப்பட்டன.
அதே போல மதுரை மாவட்டத்தில் பிரபல ஏழு கஞ்சா வியாபாரிகளின்
29 வங்கிக் கணக்குகளும், நான்கு நிலம், வாகனம் உட்பட்ட சொத்துக்களும்
முடக்கப்பட்டன.
தேனி மாவட்ட கஞ்சா வியாபாரிகள், ஆறு குற்றவாளிகளின்
8 வங்கிக் கணக்குகள், வீட்டுமனை, வாகனம் போன்ற சொத்துக்களும்
முடக்கப்பட்டன.
அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், மாநகர காவல்
ஆணையாளர்களும், கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள
மொத்த வியாபாரிகளின் வங்கிக் கணக்குகளையும், சட்ட விரோதமாக வாங்கிக்
குவித்த சொத்துக்களையும் முடக்கி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு
அறிக்கை அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு சார்பில் டிஜிபி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்….
”இனிவரும் காலங்களில், தமிழ்நாட்டில் கஞ்சா கடத்துவோர்,
பதுக்குவோர், விற்போர், இந்த குற்றத்தின் மூலம் சம்பாதிக்கும் அனைத்து
சொத்துக்களும் முடக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார்.