நாடு முழுவதும் நாளொன்றுக்கு 15 பேர் வீதம், கடந்த 5 ஆண்டுகளில் 28 ஆயிரத்து 572 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என நாடாளுமன்றத்தில் வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. விவாதங்களின்போது, விவசாயிகள் தற்கொலை தொடர்பாக மக்களவை உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த இந்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் நாட்டில் 28 ஆயிரத்து 572 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என கூறியுள்ளார். இதன்படி, 2017-ம் ஆண்டில் 5,955 விவ சாயிகளும், 2018-ம் ஆண்டில் 5,763 பேரும், 2019-ம் ஆண்டில் 5,957 பேரும், 2020-ம் ஆண்டில் 5,579 பேரும், 2021-ம் ஆண்டில் 5,318 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதாவது நாளொன்றுக்கு 15 விவசாயிகள் இறந்துள்ளனர். இந்த 5 ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டும் மராட்டியம் மற்றும் கர்நாடகாவில் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்துள்ளதுடன், இந்த பட்டியலில் முதல் மற்றும் 2-வது இடத்தில் இந்த மாநிலங்கள் உள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்து உள்ளார்.
பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து உள்ளது. பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயி களுக்கு வருவாய் கிடைக்க செய்வதற்கான நடவடிக்கைகள், பிரதம மந்திரி பசல் பீம யோஜனா உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன என அமைச்சர் தோமர் கூறியுள்ளார்.