உலகளாவிய போட்டியை சமாளிக்க ராக்கெட் தயாரிப்பில் தனியார் நிறுவனங்கள் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில், கடந்த 2020 ஆம் ஆண்டு இன்ஸ்பேஸ் என்ற அமைப்பை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உருவாக்கியது. இதன் மூலம் ராக்கெட், செயற்கைக்கோள் தயாரித்தலில் தனியார் நிறுவனங்கள் அனும திக்கப்பட்டன. அதன்படி ஐதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் என்னும் ஏரோ ஸ்பேஸ் நிறுவனம் தனது முதல் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்காக இஸ்ரோ உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.
அந்த திட்டத்தின் மூலம் 480 கிலோ எடை கொண்ட செயற்கைக் கோள்களை சுமந்து செல்லும் வகையில் விக்ரம்-எஸ் ராக்கெட்டை, சோதனை முயற்சியாக விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த நவம்பர் 15ஆம் தேதி ராக்கெட் ஏவுதளத்தில் தயாராக இருந்த பொழுது, மோசமான வானிலை காரணமாக, திட்டம் கை விடப்பட்டது. இந்த நிலையில் தற்போது வானிலை சாதகமாக இருப்பதால் விக்ரம்-எஸ் ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து நாளை காலை 11:30 மணியளவில் விண்ணில் ஏவப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான இறுதி கட்ட ஏற்பாடுகளை ஸ்கைரூட் நிறுவனம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விக்ரம்-எஸ் ராக்கெட், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் குழு வடிவமைத்தது. இந்த ராக்கெட் மூலம் மூன்று ஆய்வு சாதனங்களும் சேர்த்து அனுப்பப்பட உள்ளது. பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 120 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டு ஆய்வு பணிக்காக பயன்படுத்தப்பட உள்ளது. இதேபோன்று பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தயாரித்த ராக்கெட்டுகளை விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.