ஆஸ்திரேலிய பிரதமர் வரும் 8-ந்தேதி முதல் 3 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
புதுடெல்லி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வரும் 8-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை 3 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என மத்திய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அவரது இந்த பயணத்தில் அந்நாட்டின் வர்த்தக மற்றும் சுற்றுலா துறை மந்திரி டான் பர்ரெல், வளங்கள் மற்றும் வடக்கு ஆஸ்திரேலியாவுக்கான மந்திரி மேடலின் கிங் உள்ளிட்டோரும் மற்றும் உயர்மட்ட வர்த்தக குழு ஒன்றும் வருகை தர இருக்கிறது. இதுபற்றி மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வரும் 8-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை இந்தியாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி, 8-ந்தேதி குஜராத்தின் ஆமதாபாத் நகர், அதன் பின்னர் 9-ந் தேதி மும்பை மற்றும் டில்லிக்கும் செல்கிறார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான விரிவான செயல்திட்டம் சார்ந்த நட்புறவின் கீழான ஒத்துழைப்பு பற்றிய வருடாந்திர கூட்டத்தில் இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். இது தவிர, பரஸ்பர நலன் சார்ந்த, மண்டல மற்றும் சர்வதேச விவகாரங்கள் பற்றியும் இருவரும் விவாதிக்க உள்ளனர். இந்த பயணத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்முவையும் அல்பானீஸ் சந்தித்து பேசுகிறார் என்று மத்திய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.