சென்னை, ஆர்.கே நகர் பகுதியில் ஆட்டோவில் 44.75 கிலோ குட்கா பாக்கெட்டுகள் கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்களின் ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP -Drive Against Banned Tobacco Products) மூலம் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் சென்னை பெருநகரில் தீவிரமாக கண்காணித்து, குட்கா, மாவா, ஹான்ஸ் ஆகிய தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருபவர்கள், தயார் செய்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன் மேற்பார்வையில் ஆர்.கே நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் இன்று (29.12.2022) காலை தண்டையார்பேட்டை, கெனால் ரோட்டில் கண்காணிப்பு பணியில் இருந்த போது, அவ்வழியே வந்த ஆட்டோவை நிறுத்தச் சொன்னபோது, ஆட்டோவை நிறுத்திவிட்டு 3 நபர்கள் தப்பியோடவே, ஒரு நபர் மட்டும் பிடிபட்டார். மேலும் ஆட்டோவில் இருந்த மூட்டையை சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அதன்பேரில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகளை கடத்தி வந்த திருவொற்றியூரைச் சேர்ந்த ஆனந்தராஜ் (44) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 44.75 கிலோ எடை கொண்டகூலிப், ஹான்ஸ், விமல், வி1, ரெமோ உள்ளிட்ட குட்கா புகை யிலை பாக்கெட்டுகள் மற்றும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்தச் சம்பவத்தில் தப்பியோடிய 3 நபர்களை பிடிக்க காவல் குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆனந்தராஜ் விசாரணைக்குப் பின்னர், இன்று (29.12.2022) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.