சமீப காலமாக சைபர் கிரைம் குற்றவாளிகள் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கத்தில் புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அதன்படி பொதுமக்களின் மொபைல் எண்ணுக்கு தங்கள் வீட்டு மின் இணைப்பு (Electricity) இன்று இரவோடு துண்டிக்கப்படும் என்றும், சென்ற மாத பில் கட்டணம் அப்டேட் செய்யப்படவில்லை எனவும் உடனே மின்வாரிய அதிகாரியை தொடர்பு கொள்ளுங்கள் அல்லது வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளுங்கள் என்று ஒரு மொபைல் எண்ணையும் சேர்த்து குறுந்தகவலாக (SMS) அனுப்புவர்.
இதனை உண்மை என்று எண்ணி தொடர்பு கொள்ளும் பொதுமக்களிடம் அவர்கள் போனில் ரிமோட் அக்சஸ் அப்ளிகேஷன்களான Quick Support அல்லது Any Desk போன்றவற்றை டவுன்லோட் செய்ய சொல்லுவர். அதன் மூலம் எதிர்முனையில் இருக்கும் பொதுமக்களின் செல்போனில் உள்ள விவரங்களை சைபர் குற்றவாளிகள் எளிதாக பார்க்க முடியும். பின்னர் 10 ரூபாய் போன்ற குறைந்த அளவில் ரீசார்ஜ் செய்ய சொல்லுவர். அப்போது பொதுமக்கள் உள்ளிடும் வங்கி தொடர்பான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டுகளை பயன்படுத்தி குற்றவாளிகள் தங்களுக்கு தேவையான அக்கவுண்டுகளுக்கு பணம் அனுப்புவர். Quick Support, Any Desk போன்ற செயலிகளை (APP) டவுன்லோட் செய்ததால் பரிவர்த்தனை தொடர்பாக பொதுமக்களின் மொபைல் எண்ணிற்கு வரும் One Time Password (OTP) களையும் குற்றவாளிகளால் எளிதில் கண்டறிய முடியும். இதன் மூலம் வங்கி கணக்கிலிருந்து பணத்தை கொள்ளையடிப்பர்.
எனவே பொதுமக்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று வரும் போலியான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், அந்த மொபைல் எண்களை தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும், மின்வாரியத்திலிருந்து இது போன்ற குறுந்தகவல்களோ (SMS), போன் அழைப்புகளோ வராது என்பதால், பொதுமக்கள் இது போன்ற சம்பவங்களில் கவனமுடன் இருக்குமாறு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.