Take a fresh look at your lifestyle.

ஆன்லைனில் சைபர்கிரைம் மோசடி ஆசாமிகளிடம் சிக்கி ஏமாறாதீர்கள்: கமிஷனர் சங்கர்ஜிவால் எச்சரிக்கை

chennai city police commissioner Shankar jiwal IPS awareness public for cyber crimes

73

தொழில் நுட்பம் வளர்ந்து உலகமே ஒரு கிராமமாக சுருங்கி விட்ட இந்த சூழ்நிலையில் மொபைல் போனை மட்டும் கையில் வைத்து கொண்டு சைபர் குற்றங்கள் மூலம் பணம் மோசடி செய்யும் கும்பல் அதிகரித்து வருகிறது. OTP பெறுதல், QR Code அனுப்புதல், KYC Update என்ற பெயரில் லிங்க அனுப்புதல் போன்ற மோசடிகளையும் தாண்டி, தற்போது நல்ல வேலையில் சம்பாதிக்கும் ஆண்களையும் மற்றும் ஓய்வு பெற்ற வயதான ஆண்களையும் குறிவைத்து ஏமாற்றத்துவங்கியுள்ளனர் சைபர் கிரைம் கிரிமினல்கள்.

சென்னை நகர சைபர்கிரைமின் தலைமைப் பிரிவு சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இயங்கி வருகிறது. கமிஷனர் சங்கர்ஜிவால் நேரடி மேற்பார்வையில் கூடுதல் கமிஷனர் தேன்மொழி தலைமையில் இயங்கும் இந்த சைபர்கிரைம் பிரிவில் தினந்தோறும் வெவ்வேறு வகையான ஆன்லைன் மோசடிகள் குறித்து ஏராளமான புகார்கள் குவிந்து வருகின்றன.

அவற்றின் மீது சைபர்கிரைம் போலீசார் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து இது போன்ற மோசடிகள் நடைபெறுவதற்கு காரணம் மக்களிடையே ஆன்லைன் மோசடி குறித்த விழிப்புணர்வு இல்லாததே காரணம். ஆகவே சைபர்கிரைம் போலீசார் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கீழ்க்கண்ட எச்சரிக்கைகளை விழிப்புணர்வாக தந்துள்ளார். கவனமாக படியுங்கள்…

சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தேன்மொழி

(1) பெண்கள் புகைப்படத்தை Profile Picture ஆக வைத்து கொண்டு பேஸ்புக் கிரிண்டர், மற்றும் பல சாட் ஆப்களில் முதலில் நண்பர்களாகி ஏமாற்றுகிறார்கள்.
(2) மெசென்ஜரில் பேசி வாட்சாப் எண்ணை வாங்கி, பெண் குரலில் Voice Changer ஆப்களை பயன்படுத்தி மிக இனிமையாக பேசுவார்கள்.
(3) வெளிநாட்டு பெண்களின் புகைப்படத்தை பயன்படுத்தி பெண் குரலில் பேசி, நம்ப வைத்து தான் இந்தியா வந்து முதலீடு செய்ய போவதாகவும் தெரிவிப்பார்கள்.
(4) டெல்லி, மும்பை போன்ற விமான நிலையங்களின் வீடியோக்களை அனுப்பி இந்தியா வந்திறங்கியதாக நம்பவைப்பார்கள்.
(5) பிறகு தான் கோடிக்கணக்கில் பவுண்ட்ஸ்( பிரிட்டிஸ் பணம்) கொண்டு வந்ததால் தன்னை கஸ்டம்ஸில் பிடித்து வைத்துள்ளார்கள் என்றும் தன்னை விடுவிக்க பணம் அனுப்புங்கள் என்று கூறுவார்கள்.
(6) இதனை நம்பவைக்கும் பொருட்டு, போலியான Indian Customs certificate மற்றும் பணக் கட்டுகளை கட்டி வைத்திருப்பது போன்றோ (அ) பணக்கட்டுகளை எண்ணுவது போன்றோ வீடியோ அனுப்புவார்கள்.
(7) முதலில் சிறிய அளவிலான தொகையை (ரூபாய் 1 லட்சத்திற்கு) அவர்கள் தரும்
வங்கி கணக்கிற்கு அனுப்ப சொல்வார்கள் பின்னர் Customs Charge, Transition Charge, Late Fee Charge என்று பல்வேறு பெயரில் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்ப சொல்வார்கள் இதனை நம்பி லட்சக்கணக்கில் பணத்தை அனுப்பி ஏமாறுகிறார்கள்.

இதே போல் வெளிநாட்டு ஆண்கள் போல் பேசி Matrimony website – களில் திருமணத்திற்காக பதிவு செய்யும் பெண்களை இந்த கும்பல் ஏமாற்றுகிறது. மேலும் வெளிநாட்டிலிருந்து பேசுவது போல் பேசி பிசினஸ் செய்யலாம் என்று கூறி Animal Vaccine Oil, Oil Seeds, Powder மருந்து தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை இந்தியாவி லிருந்து ஏற்றுமதி செய்யலாம் என்று கூறி பணம் பறிப்பார்கள்.

எனவே பொதுமக்கள், ஆண்களோ, பெண்களோ (அல்லது) நிறுவனமோ, வெளிநாட்டவர்கள் போல் சமூக வலைதளங்களிலோ, இ மெயிலிலோ தொடர்பு கொண்டு பேசும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

வர்த்தகமோ, திருமணமோ தகுந்த நபர்களின் மூலம் விசாரித்து அறிய வேண்டும். அந்த நபர்களிடம் பேசும் போது அந்த வெளிநாட்டவர் பணம் அனுப்ப சொல்லி கேட்டால் உடனடியாக அவர்களது தொடர்பை துண்டித்து விடவேண்டும் பணம் எதுவும் அனுப்பகூடாது. ஒருவேளை சிறிய அளவிலான பணம் ஏதேனும் அனுப்பி விட்டால், அந்த பணம் திரும்பி கிடைக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் மீண்டும் பணம் எதுவும் அனுப்பகூடாது. நீங்கள் அனுப்பும் பணம் எதையும் உங்களுடன் பேசும் நபர்கள் திருப்பி தரப்போவதில்லை .

எனவே முன்பின் தெரியாமல் பேஸ்புக், வாட்சாப், டெலிகிராமில் பேசுபவர்களை நம்பி பணம் அனுப்ப கூடாது என்று பொதுமக்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.