Take a fresh look at your lifestyle.

அரவிந்தர் நினைவு தபால் தலை, ரூ. 150 நாணயத்தை வெளியிட்ட பிரதமர் மோடி

35

அரவிந்தரின் 150-வது பிறந்த நாளையொட்டி நாணயத்தை மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி, கவர்னர்கள் தமிழிசை சவுந்தரராஜன், ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வெளியிட்டனர்.

மகான் அரவிந்தரின் 150-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது தபால் தலை, அரவிந்தரின் உருவம் பொறித்த ரூ.150 நாணயம் ஆகியவற்றை காணொலி் காட்சி மூலம் பிரதமர் மோடி வெளியிட்டார். புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நேற்று மாலை நடந்த விழாவிற்கு மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி தலைமை தாங்கினார். தமிழக கவர்னர் ஆர்.என். ரவி, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் காணொலி காட்சி மூலமாக தபால் தலையை வெளியிட்டு, அரவிந்தரின் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட்டு பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய தேசத்தில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக இந்த தினத்தை கருதுகிறேன். புதுச்சேரி மண்ணில் குறிப்பாக அரவிந்தரின் நினைவை போற்றுகின்ற வகையில் அவரது நினைவு நாணயம், அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் இந்தியாவில் ஒரு புதிய உணர்வை, சக்தியை கொடுக்கும். மகான் அரவிந்தரின் யோகாசனம் என்பது ஒரு சமூக சக்தி என்பது மட்டுமல்ல அது அனைவரையும் இணைக்கும் சக்தியாகும்.

நாட்டில் பல அவதார புருஷர்கள் இருந்தனர். அந்த வகையில் சுவாமி விவேகானந்தர், மகான் அரவிந்தர், மகாத்மா காந்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் 3 பேருக்கும், 1893-ம் ஆண்டிற்கு ஒரு ஒற்றுமை இருக்கிறது. அந்த ஆண்டில் தான் சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவிற்கு சென்று சாதனை படைத்தார். இதேபோல் மகாத்மா காந்தி தென்ஆப்ரிக்காவுக்கு சென்று சாதனை படைத்தார். அரவிந்தர் இங்கிலாந்தில் தனது படிப்பை முடித்து விட்டு இந்தியா திரும்பினார்.

அரவிந்தர் தனது நண்பர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு தேசபக்தியை உருவாக்கினார். அவர் வங்காளத்தில் பிறந்தாலும் கூட குஜராத்தி, வங்காள மொழியை நன்கு கற்றார். இதுபோன்று பல மொழிகளை அவர் நேசித்தார். அரவிந்தர் தனது வாழ்நாளில் அதிக நாட்கள் குஜராத்திலும், புதுச்சேரியிலும் தான் வாழ்ந்துள்ளார்.

அரவிந்தர் ஒரு தனித்துவமிக்க அரசியல் ஞானியாகவும், ஆன்மிக சக்தியாகவும் விளங்கினார். இந்திய தேசத்தின் விடுதலைக்காக அவர் பாடுபட்டதோடு மட்டுமல்லாமல் ஆன்மிக சக்தியையும் மேலே கொண்டு வர வேண்டும் என்று விரும்பினார். ஆன்மிக சக்தியுடன் உறுதியான நிலையை சுதந்திர வேட்கையை உருவாக்கி இந்தியாவை தலை நிமிரச் செய்தார். மனிதனில் இருந்து இறைவன் வரை நாம் ஒருவரை போற்றுகிறோம் என்று சொன்னால் அவருடைய செயல்பாடுகளே காரணமாகும். அரவிந்தரின் பிறப்பு இந்தியாவிற்கு ஒரு சக்தியை கொடுத்துள்ளது. அவர் சிறையில் இருக்கும் போது கூட மகாபாரதம், ராமாயணம் போன்ற நூல்களை படித்து வந்தார். அவரை ஒடுக்குவதற்காக சிறையிலேயே பல்வேறு முயற்சிகள் நடந்தது. ஆனால் அந்த சக்திகள் அனைத்தையும் முறியடித்தார். இன்றைய இளைஞர்கள் அரவிந்தரின் ஆன்மிக சக்தியை உணர்ந்து நாட்டில் உள்ள சவால்களை எதிர்கொள்ள வேண்டும். அவரது ஆன்மிக உணர்வுகளை தாங்கி நாம் இந்தியாவில் உள்ள சவால்களை எதிர்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:- அரவிந்தருக்கும், மகாகவி பாரதிக்கும் இடையில் ஆழமான நட்பு இருந்தது. பிரதமரின் ஆட்சியில் அரவிந்தர் கண்ட கனவுகள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. நாட்டிற்கு மட்டுமல்ல மனதிற்கும் சுதந்திரம் வேண்டும் என்றார் அரவிந்தர். அதுதான் ஜூன் 21 ந்தேதி உலக யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரவிந்தர் தொடக்க நிலையில் தாய்மொழி கல்விதான் சிறந்தது என்று சொன்னார். அதைத்தான் பிரதமர் புதிய கல்விக் கொள்கையில் வலியுறுத்தி வருகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியா உலகிற்கு இணைப்பு நாடாக இருக்க வேண்டும் என்று அரவிந்தர் நினைத்தார். ஜி 20 மாநாட்டை இந்தியா தலைமை தாங்குகிறது. ஆகவே அரவிந்தரின் கனவு ஒவ்வொன்றும் நனவாகிக் கொண்டிருக்கிறது. அரவிந்தர் புதுச்சேரியில் ஏற்படுத்திய ஆன்மிக புரட்சி ஆன்மாக்களை சுத்தப்படுத்துவது மட்டுமல்லாமல் மகிழ்ச்சியான வாழ்விற்கு வழிகாட்டி நடத்திக் கொண்டிருக்கிறது. அதன் வழி நடப்போம்.

விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

புதுச்சேரி அரசு சார்பாக வைத்த கோரிக்கையை ஏற்று பிரதமர் மோடி அரவிந்தரின் தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டுள்ளார். புதுச்சேரி ஆன்மிக தலம். பல சித்தர்கள், ஞானிகளை கொண்ட மாநிலம். இங்கு அரவிந்தர் வருகை தந்த போது பாரதியார் வரவேற்றார். ஆன்மிக பூமியில் தங்கிய பின்னர் அரவிந்தர் ஆன்மிக குருவாக உயர்ந்துள்ளார் என்பது உண்மையாகும். உலக அளவில் இந்தியா உயர்ந்த இடத்திற்கு வரும் என்று எண்ணினார். அதன்படியே தற்போது நமது நாடு உயர்ந்து வருகிறது. உலக அளவில் தலை நிமிர்ந்து நிற்கிறது.

ஆன்மிக பலம் இருந்தால் அந்த நாடு உலக அளவில் உயரும். தெய்வத்தின் பலத்தால் மட்டுமே மனிதர்கள் உயிர்ந்து வாழ முடியும் என்ற தத்துவத்தை ஞானிகள், மகான்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.

உலகில் பல இடங்களில் இருந்து அரவிந்தர் ஆசிரமத்திற்கு பக்தர்கள் வருகின்றனர். எனவே சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் அரவிந்தர் ஆசிரமம் உள்ளது. அனைவரும் இங்கு வர வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆரோவில் சர்வதேச நகரம் தொடங்கப்பட்டது. இது புதுச்சேரி, தமிழகத்திற்கு பெருமை சேர்க்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சந்திர பிரியங்கா, மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மத்திய கலை பண்பாட்டு துறையின் இணை செயலாளர் உமா நந்தூரி வரவேற்றுப் பேசினார். முடிவில் ஆரோவில் செயலாளர் டாக்டர் ஜெயந்தி ரவி நன்றி கூறினார். விழாவில் அரவிந்தரின் சித்தாந்தத்தை குறிப்பிட்டு குறும்படம் வெளியிடப்பட்டது. கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.