சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில். காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக திருவல்லிக்கேணி, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (PEW/ Triplicane) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (06.03.2023) அயனாவரம் பஸ் டிப்போ அருகே கண்காணிப்பு பணியிலிருந்தபோது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை விசாரணை செய்தபோது, முன்னுக்கப் பின் முரணாக பதிலளித்தார். சந்தேகத்தின்பேரில், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் பெருமளவு கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அதன்பேரில், சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த பிரதீப்குமார், வ/29, த/பெ.தனசேகர், எண்.73, மேட்டுத் தெரு, அயனாவரம், சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 13.5 கிலோ எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் எதிரி பிரதீப்குமார் மீது ஏற்கனவே 1 கஞ்சா வழக்கு உட்பட 2 குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மேற்படி எதிரி பிரதீப்குமார் விசாரணைக்குப் பின்னர் நேற்று (6.03.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.