Take a fresh look at your lifestyle.

அதிமுக பொதுக்குழு வழக்கு: எடப்பாடி சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல்

54

அண்ணா தி.மு.க. பொதுக்குழு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் 39 பக்க பதில் மனுவை எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ளார்.

அண்ணா தி.மு.க.வில் தலைமை பதவியை கைப்பற்றுவது யார்? என்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை 11ந்தேதி அண்ணா தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அண்ணா தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வெளியானது. தனி நீதிபதி முதலில் அளித்த தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும், 2 நீதிபதிகள் பின்னர் அளித்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் இருந்தன. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 3ந்தேதி முதல் தொடர்ச்சியாக 3 நாட்கள் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பல்வேறு வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன. அண்ணா தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதும், கட்சியில் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம் தன்னிச்சையாக நீக்கப்பட்டதும் செல்லாது என்று வாதிடப்பட்டது. பின்னர் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டு கடந்த 10, 11 ஆகிய தேதிகளில் விசாரணை தொடர்ந்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷி கேஷ்ராய் ஆகியோர் 16ந்தேதிக்குள் இரு தரப்பினரும் எழுத்துப் பூர்வமாக பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தனர். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தனித்தனியாக தங்கள் தரப்பு பதில் மனுக்களை எழுத்துப்பூர்வ பதிலாக நேற்று தாக்கல் செய்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி தரப்பில் 39 பக்கங்களை கொண்ட பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் 18 பக்கங்களை கொண்ட பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இரு தரப்பினரும் தங்கள் தரப்பு நியாயங்களை பதில் மனுவில் தெள்ளத்தெளிவாகவும், விரிவாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 2022ம் ஆண்டு ஜூலை 11ந்தேதி நடைபெற்ற அண்ணா தி.மு.க. பொதுக்குழு கட்சியின் சட்ட விதிகளுக்கு உட்பட்டே நடத்தப்பட்டுள்ளது. பெரும் பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுடனேயே இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அண்ணா தி.மு.க.வில் பொதுக்குழுவே உச்சபட்ச அங்கீகாரம் படைத்த அமைப்பாகும். இதனை கூட்டியே கட்சியின் அனைத்து முடிவுகளும் இதற்கு முன்பு எடுக்கப்பட்டு உள்ளன. கட்சியில் உள்ள கோடிக்கணக்கான தொண்டர்கள் இந்த பொதுக்குழு முடிவுகளை அங்கீகாரம் செய்துள்ளனர். ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக கருத்துக்களை கேட்க முடியாது என்பதாலேயே பொதுக்குழு அதிகாரம் மிக்க அமைப்பாக அண்ணா தி.மு.க.வில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
2017ம் ஆண்டு அண்ணா தி.மு.க. விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய 2 பதவிகளும் அப்போது பொதுக்குழு உறுப்பினர்களின் அதிகாரத்தாலேயே உருவாக்கப்பட்டன. அப்படி இருக்கும் போது அந்த பதவிகளை நீக்கும் அதிகாரமும் பொதுக்குழுவுக்கு உண்டு. பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்றே பொதுக்குழு கூட்டப்பட்டு அதில் எடப்பாடி பழனிசாமி தேர்வாகியுள்ளார். எனவே பொதுக்குழுவை நடத்தி தீர்மானங்களை நிறைவேற்றியதில் எந்தவிதமான விதி மீறல்களும் இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.