அதிமுக சார்பில் வரும் 19 ந் தேதி அன்று நடைபெற உள்ள கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு எடப்பாடி பழனிசாமி அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அண்ணா தி.மு.க. சார்பில், கழக இடைக்காலப் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, வருகின்ற 19 ந் தேதி – திங்கட் கிழமை மாலை 5 மணியளவில், சென்னை, வானகரம், ஜீசஸ் கால்ஸ் வளாகத்தில் அமைந்துள்ள விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியை நடத்த உள்ளார் என தலைமைக் கழகத்தின் சார்பில் 7.12.2022 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில், கிறிஸ்தவ பேராயர்கள், ஆயர்கள், போதகர்கள், தோழமை கிறிஸ்தவ தலைவர்கள், அருட்தந்தையர், அருட்சகோதரிகள், கிறிஸ்தவப் பெருமக்கள் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளார்கள்.
எனவே, தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக செய்தித் தொடர்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழகப் பொறுப்புகளில் உள்ள கிறிஸ்தவப் பெருமக்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு, கிறிஸ்துமஸ் கால அன்பைப் பகிர்ந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.